Saturday, December 10, 2011

மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டு

இக்கல்வெட்டுக் கிரந்தஎழுத்தில் உள்ளது. எனவே இதன்பொருள்மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றது.
“எல்லா உலகத்திற்கும் ஒப்பற்ற வீரனும், வாட் போரில் வன்மை மிக்கவனும், வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், லங்காராம என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்கப் போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும், சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி வீரனும், மூன்று ஆண்டுகள்… தரித்த முடிகளை யுடையவனும், அரசர்க்கரசும், வானுலக மகளிர் கூட்டுறவால் செருக்கிய பாண்டியன் சேரன் என்னு மிவர்கள் வெண்சாமரை வீசிப் போற்றப்பெற்ற பெருமையுடையானு்ம, பாண்டியமண்டலத்தைக் கவர்ந்த கன்னட வேந்தனை வென்றவனும், போரில் சேனைகளை யிழந்த வீரசோமேசுவரன் என்பவனால் சரணடைந்து பற்றிக்கொள்ளப்பட்ட பாதங்களை யுடையவனும், வீரர்க்கு அணிகலனாக விளங்குபவனும், ராஜபரமேசுவரன், ராஜபரம மாகேசுவரன், ராஜ நாராயணன் என்னும் பெயர்களையுடையவனும், எல்லாச் சமயங்களையும் ஒப்ப நிலைபெறச் செய்பவனும்,
யானை காலாள் முதலிய படைகளைப் புரப்பவனும், அரசியல், இசை, ஏனைக்கல்வி ஆகியவற்றில் தேர்ச்சிமிக்க தலைவனும், பகைவேந்தர் உளத்திற்குச் சல்யமென்னும் படையை ஒத்துக் கலக்கஞ் செய்பவனுமாகிய திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு…”
ஆதாரம்: தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம்- பகுதி:2, பக்கம்: 219- 220

No comments:

Post a Comment